Sunday, February 27, 2005

 

மனிதனின்

பயங்கள் சுனாமியை விட வலியவை !!

ந. உதயகுமார்

கடலோரச் சுற்றுலா விடுதிகளில் சுனாமி புகுந்து பேரழிவை ஏற்படுத்திய கோரக் காட்சிகளைத் தொலைக்காட்சியில் கண்டோம். சுனாமி வ்ந்து சென்று 60 நாட்கள் கடந்து விட்டன.

சுனாமியால் தாக்கப்பட்ட மக்களில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள், இந்தோனேசியாவைச் சார்ந்தவர்கள். தொலைக்காட்சியில், "உலகின் வெப்பமண்டலத்தின் சுற்றுலாத் தளங்களின் சொர்க்கம்" என்று வர்ணிக்கப் படும், ·புகெட் தீவின் சில பகுதிகளுக்கு ஏற்பட்ட அழிவினை திரும்பத் திரும்ப காட்டினர். இதனால் உலக மக்களுக்கு ·புகெட் அழிந்து விட்டது என்ற எண்ணம் வளர்ந்து விட்டது போல் தோன்றுகிறது.

உண்மையில், கிடைக்கும் தகவல்களை வைத்துப் பார்த்தால். ·புகெட் தீவிற்கு ஏற்பட்ட அழிவுகளைக் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர். அனேக கடலோர விடுதிகள் திறக்கப் பட்டு சுற்றுலாப் பயணிகள் வரவிற்காகக் காத்திருக்கின்றன.

ஆனால் சுற்றுலாப் பயணிகளைத்தான் காணவில்லை.

சுற்றுலாப் பயணிகள் இல்லாததால், ·புகெட் கடற்கரைகளின் ஆளில்லாத அழகிய பரந்த மணல் பரப்பை மீண்டும் காணமுடிகிறது. கடல் நீரும் மாசு குறைந்து தெளிவாகக் காணப் படுகிறது. இவை நமக்குக் கிடைக்கும் பத்திரிக்கைச் செய்திகள்.

·புகெட் ஆபத்து மிகுந்த பகுதி என்ற எண்ணம் சுற்றுலாப் பயணிகளிடம் நிலவுவதும், அனேக மக்கள் இறந்து போன ஒரு இடத்திற்கு சுற்றுலா செல்வது மனித நேயச் செயலாக இருக்காது என்ற தயக்கமும் சுற்றுலாப் பயணிகள் ·புகெட்டை புறக்கணிக்க முக்கிய காரணங்கள் என்று கருதப் படுகின்றன.

இப்பகுதி வாழ் மக்களில் 70 சதவிகிததிற்கும் அதிகம் பேர் சுற்றுலாவைச் சார்ந்த தொழில்களை மையமாகக் கொண்டே தங்கள் வாழ்க்கையை அமைத்திருந்தனர். ஒவ்வோரு வருடமும், ஜனவரி, ·பிப்ரவரி, மார்ச் மாதங்களில்தான் ·புகெட் தீவில் சுற்றுலாப் பயணிகளின் வரவு அதிகரித்திருக்கும்.

இந்த முறை சுற்றுலாப் பயணிகள் வரவு குறைந்து போனதால் ·புகெட் தீவிற்கு ஏற்படும் அன்னியச் செலாவணி இழப்பு (கடந்த 60 நாட்களில் மட்டும்) இந்திய ரூபாய் மதிப்பில் 2200 கோடி என்று அளவிடப் பட்டிருக்கிறது. இது சுனாமி இப் பகுதியில் ஏற்படுத்திய அழிவை விட இரண்டு மடங்கு அதிகம் என்றும் கூறப் படுகிறது.

ஆகவே சுற்றுலாப் பயணிகள் இப் பகுதியை புறக்கணிப்பதால் அங்குள்ள மக்களுக்கு ஏற்படும் தாக்கம் சுனாமியை விடக் கடினமாயிருப்பதைக் காண முடிகிறது.

இப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளே இல்லாமல் இல்லை. வந்து போகும் வெகு சிலரில் ஒரு பிரிவினர், இப்பகுதியில் ஏற்பட்ட அழிவுகளைப் பார்வையிட வருகின்றனர். ம்ற்றொரு பிரிவினர், "நாங்கள் இங்கு செலவு செய்யும் பணம் இப்பகுதி மக்களுக்கு மிகவும் உதவும். ஆகவே இப்பகுதி மக்களுக்கு உதவவே நாங்கள் இங்கு சுற்றுலா வந்துள்ளோம்" என்று கூறியுள்ளனர்.

யோசித்துப் பார்த்தால் இரண்டாம் பிரிவினர் கட்சியில் முடிந்தால் நாமும் சேர வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. சுனாமியால் பாதிக்கப் பட்ட மக்கள் இயல்பு நிலைக்கு விரைவில் திரும்ப அவர்கள் சார்ந்துள்ள முறையான தொழில்கள் நலிவடையாமல் காக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடமும் ஏற்பட வேண்டும்.

அனைவரும் தங்கள் சொந்த பயங்களை சிறிது ஒதுக்கி வைத்து இத்தொழில்களைத் தேவையான போது தயக்கமில்லாமல் நாட வேண்டும்.
 

மீனவர்கள்

கடலுக்குச் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்

ந. உதயகுமார்

தமிழக மீனவர்கள் கட்டு மரங்களிலும், சிறு படகுகளிலும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல ஆரம்பித்து விட்டனர்! இவர்கள் இப்போது ஐந்து முதல் ஆறு மைல் தொலைவு வரை கடலுக்குள் செல்கிறார்கள் என்று தெரிகிறது.

தற்போது கடலுக்குச் சென்று வரும் மீனவர்கள், குறைந்த தூரத்தில், வழக்கத்தை விட குறைந்த நேரத்தில், அதிக மீன்கள் கிடைப்பதாகக் கூறுகிறார்கள். கடலில் மீன் வளத்தை சுனாமி அதிகரித்திருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள்!!

இந்த நம்பிக்கை தவறு என்று எனக்குத் தோன்றுகிறது.

சுனாமி, மீன் பிடிக்கும் திறனைப் பெருமளவு (திறமையான மீனவர்கள், கட்டுமரங்கள், படகுகள், மீன்வலைகள்) அழித்துவிட்ட நிலையில், வழக்கத்தை விடக் குறைவான மீனவர்களே கடலுக்குச் செல்ல முடிகிறது.
கடலுக்குச் செல்வதில் இன்னுமும் மீனவரிடம் நிலவும் பயமும் குறைவானோர் மீன் பிடிக்கச் செல்லும் மற்றோர் காரணம்.
சிதைந்து போன படகுகள், மற்றும் பொது மக்களுக்கு மீன் உண்பதில் இருக்கும் அச்சத்தால் சந்தையில் மீனுக்குத் தேவை குறைந்திருத்தல், போன்ற காரணங்களால் பெரிய படகுகள் இன்னும் மீன் பிடிக்கச் செல்லவில்லை.
இப்போது மீன்கள் இனவிருத்தி செய்யும் காலமாகையால், கடலில் மீன்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்க இயற்கையாக வாய்ப்பிருக்கும்.

சுனாமிக்கு முன், மீன் கிடைக்கும் அளவிற்கு அதிகமான அளவில் மீனவர்கள் கடலுக்குச் சென்று வந்ததால், பல்ர் நீண்ட உழைப்பிற்கும் நேரச் செலவிற்கும் பின்னரும் வெறும் கையுடன் கரைக்குத் திரும்பும் நிலை இருந்தது. ஆகவே மீனவர்கள் வருமானமும் நிலையற்றதாக இருந்தது.


மேலே எடுத்துக் காட்டிய காரணங்களால், இப்போது மீன் பிடிப்பதில் போட்டி மற்றும் திறன் குறைந்திருப்பதும், மீன்கள் இனவிருத்திக் காலத்தாலும், மீனவர்களுக்கு அதிக மீன்கள் வழக்கத்தை விடக் குறைந்த நேரம் மற்றும் முயற்சியில் கிடைக்கிறது என்பது என் எண்ணம்.


ஆனால், மீனவருக்கு மீன் வளத்தை சுனாமி அதிகரித்து விட்டதாக ஏற்பட்டுள்ள நம்பிக்கை இடைக்காலத்தில் அவர்கள் உற்சாகத்தை அதிகப் படுத்தி அவர்களைத் தொழிலுக்குச் செல்ல ஊக்கப் படுத்தும். ஆகவே இந்த நம்பிக்கை நன்மைக்கே.


அதே நேரத்தில் மற்றொரு எண்ணமும் தோன்றுகிறது. சுனாமி அழிவை மட்டும் விட்டுச் செல்லவில்லை. மீனவர்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக் கூடிய ஒரு வாய்ப்பையும் அரசுக்கு விட்டுச் சென்றிருக்கிறது.


தெற்கு ஆசியாவில், சுனாமி நாசம் செய்த மீன் பிடிக்கும் மற்றும் மீன் வளர்க்கும் தொழிலில் இருந்த சொத்துக்களின் மொத்த மதிப்பு இந்திய ரூபாயில் 2200 கோடியைத் தாண்டும். 1,11,073 படகுகளும், 36,235 சீரமைக்க முடியாத படகு விசைகளும், ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட வலை போன்ற மீன் பிடிக்கும் உபகரணங்களும், மீன் பிடி படகுகள் வந்து செல்லும் துறைமுகங்களுக்கு ஏற்பட்ட சேதங்களும், மீன் வளர்க்கும் பண்ணைகளுக்கு ஏற்பட்ட சேதங்களும் இதில் அடங்கும். இத் தகவல்களை ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு, தன் கணக்கெடுப்பிற்குப் பின் நமக்கு அளித்திருக்கிறது.


இந்த அழிவுகளை அரசுகள் சீரமைக்கும் முயற்சிகளை எடுத்து வரும் நேரத்தில், மீன் பிடி மற்றும் வளர்க்கும் திறனை, தேவைக்கதிகமாகச் செல்லாமல் வரும் காலத்தில் கட்டுப்படுத்தும் வாய்ப்பும் அரசுகளுக்குக் கிடைத்திருக்கிறது. இப்படிக் கட்டுப் படுத்துவதால், மீனவர்களுக்கு நிலையான வருமானம் கிடைக்கும். கடலில் மீன் வளமும் நிலையாக இருக்கும்.

அரசு செய்ய வேண்டியவை என்று எனக்குத் தோன்றியவை சில:

சீரமைப்புக்குச் செலவிடும் பணத்தால் ஏற்படப் போகும் திறன்களை மதிப்பிட்டு, தேவையைத் திட்டமிட்டு, தேவைக்கேற்பச் செலவு செய்தல்
மீன் தொழிலில் ஈடுபட்டு அனைத்தையும் இழந்த மீனவர்களில் சிலருக்கு மற்ற பணிகளைச் செய்ய (திறனுள்ள ஆட்கள் தேவையான தொழில்கள் பல இந்தியாவில் உள்ளன. உதாரணம்: சாரங் கட்டுதல், தண்ணீர் புகாத் தளம் அமைத்தல் போன்ற கட்டடப் பணிகள்) பயிற்சி அளித்தல்
கடலில் மீன் வளத்தை தேவைப் பட்ட நேரத்தில் அருதியிட்டுக் கூறும் திறமையை வளர்த்துக் கொள்ளுதல்.
மீன்களுக்கான தேவையை மீனவர்கள் முன்கூட்டியே அறிந்து கொள்ள வகை செய்தல்
 

சுனாமி நிவாரணம்!

ந. உதயகுமார்

மத்திய மாநில அரசுகளிடம் சேர்க்கப்பட்டிருக்கும் சுனாமி நிவாரணப் பணத்தின் பின்னணியில் கோடிக்கணக்கான இந்தியர்களின் சமூக நலச்சிந்தனையும், சுனாமியால் பாதிக்கப் பட்டவர்களுக்கான உண்மையான அனுதாபமும், பாதிக்கப் பட்டவர்களின் குடும்பங்கள் விரைவில் நன்னிலை திரும்ப அந்தப் பணம் உதவ வேண்டும் என்ற கவலையும், தன்னலம் கருதாத் தியாகமும் உள்ளன.

இரு அரசுகளும் மக்களின் எண்ணங்களை புரிந்து செயல் படும் பக்குவம் பெற்றவை என்பதில் நமக்குச் சந்தேகமில்லை.

மத்திய அரசும் மாநில அரசும் சுனாமி தாக்கிய உடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியளிப்பதில் பாரட்டும் விதத்தில் நடந்து கொண்டன.

அதே போல், சீரமைப்புப் பணிகளிலும் விரைந்து செயல் பட வேண்டும் என்ற அவசரத்தில் சில குளறுபடிகள், அபிப்பிராய பேதங்கள் ஏற்படும் போது, அவற்றை மூட்டை கட்டி ஓரத்தில் வைத்து விட்டு, பாதிக்கப் பட்ட குடும்பங்களின் நிலமை மற்றும் பொருளாதாரம் விரைந்து சீரடையப் பாடுபடுவதில் மத்திய, மாநில மக்கள் பிரதநிதிகள் அனைவரும் இணைந்து செயல் புரியவேண்டும்.

அனைத்தையும் இழந்து நிற்கும் ஏழை மீனவர்கள் அரசு தரும் கடனைப் பெரும் சுமையாகப் பார்ப்பது இயற்கையே. காப்பீட்டு வசதிகள் இல்லாமை மற்றும் மக்களின் அறியாமை போன்ற காரணங்களால் தொழிலுக்குண்டான மூலதனங்களை இழந்து தவிப்போருக்கு இத்தகைய எதிர்பாராத இழப்புகளுக்குக் காப்பீடு வழங்கும் பொறுப்பை அரசு மட்டுமே ஏற்க முடியும்/வேண்டும்.

ஏழை மீனவர்கள் புதுப் படகுகள் வேண்டும் என்று எண்ணாமல், அரசு படகுகள் வாங்குவதற்காக அறிவித்த உதவிப் பணத்தைத் தானமாகத் தங்களுக்கு அளித்தால் தங்கள் உடைந்த படகுகளைச் சீர் செய்து கொள்ள முடியும் என்று கூறியுள்ளது அரசு கவனிக்க வேண்டிய விஷயம். அதே சமயம், பசையுள்ள மீனவர்களுக்கு இலவசமாகப் பணம் கொடுக்க வேண்டியதில்லை.

இரு அரசுகளும் இணைந்து செயல் புரிந்து பாதிக்கப் பட்ட மக்களின் தேவையறிந்து விரைந்து சீரமைப்புப் பணிகளை செவ்வனே முடித்து மக்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற வேண்டும்.
 

சுனாமியால் வரும் பின் விளைவுகள்!

ந. உதயகுமார்


சுனாமி செய்து விட்டுப் போன உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் காணச்சகிக்க முடியாமலும் மிகவும் அதிர்ச்சி அளிப்பதாகவும் இருந்தது.

கூர்ந்து பார்த்தால், சுனாமி சென்று விட்டபிறகும், நம் இந்தியப் பொருளாதாரத்திற்குச் சேதம் தொடர்கிறது.

இந்தியாவின் விவசாயப் பொருளாதார வளர்ச்சி சில வருடங்களாகக் குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு அரசின் விவசாய மான்யக் கொள்கை, பொது வினியோகக் கொள்கையில் அரசு செய்த மாற்றங்கள், கடந்த சில வருடங்களாக நிலவிய வறட்சி நிலை, விவசாய சம்பந்தமான நம் ஏற்றுமதிக் கொள்கை ஆகியவை காரணங்கள்.

விவசாயம், நம் பொருளாதாரத்தின் மிகப் பெரிய அங்கம்.

வந்து சென்ற சுனாமி பல விளைநிலங்களை உவர்நிலங்களாக மாற்றியதைச் சீர் செய்யப் பல காலம் பிடிக்கப் போகிறது.

மீன்பிடிக்கும் தொழில் மூலம் வரும் பொருளாதாரம் விவசாயப் பொருளாதாரத்தில் அடங்கும்.

சுனாமி பல மீனவர்களையும், அவர்தம் குடும்பங்களையும் அழித்து விட்டது. மிஞ்சியவர் பலரின் கட்டுமரங்களையும், படகுகளையும், வலைகளையும், அழித்து விட்டது அல்லது அடித்துச் சென்று விட்டது.

கடலை நண்பனாகவும், தாயாகவும் பார்த்த மீனவர்கள், இப்போது கடலுக்குள் செல்லவே அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. போதாதென்று, மக்களுக்கு மீன் உண்பதில் அச்சம் மிகுந்துள்ளது.

தினமும் கோடிக்கணக்கில் வியாபாரம் நடக்கும் மீன் தொழில் நசிந்து கிடக்கிறது.

இது நமது விவசாயப் பொருளாதார வளர்ச்சியை மேலும் பாதிக்கப் போவது உறுதி.

அரசு எவ்வளவு விரைவாகச் சீரமைப்புப் பணிகளைச் சிறப்புடன் செய்து முடிக்கிறதோ அவ்வளவு விரைவாக இந்தியப் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டிருக்கும் அதிர்ச்சியும் சீரடையும்.

நமது பொருளாதாரம், சமீப காலங்களில் இத்தகைய சில இயற்கையின் தாக்குதல்களைத் தாங்கி இருக்கிறது. இதையும் தாங்கும்.

இவையிருக்க, சுனாமி தாக்கிய போது பல நாடுகள் உதவிக் கரம் நீட்டிய போது, நம் அரசு, "எங்களை நாங்களே பார்த்துக் கொள்கிறோம்" என்று கூறியதோடல்லாமல், அண்டை தேசங்களுக்கு விரைந்து மனிதாபிமானத்துடன் உதவிக்கரம் நீட்டியது. இந்தியனாகப் பெருமைப் படுகிறேன்.

*************************************************************************************

இந்தியா பல கோடி ரூபாய் மதிப்புள்ள இறால் மீன்களை அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் முதலிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது. சுனாமிக்குப் பின், தென்னிந்தியாவில் கிழ்க்குக் கடலோரத்தில் இருந்த பல இறால் பண்ணைகள் அழிந்து விட்டன. இதனால் இறால் ஏற்றுமதி பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

மீன் தொழிலுக்கு உதவியாக இருக்கும் பல்வேறு தொழில்களும் பாதிப்படையத் தொடங்கியுள்ளன. உடைந்த படகுகளைச் சீர் செய்வோர், அவ்வாறு சீர் செய்து கொடுக்க அனைத்தையும் இழந்து தவிக்கும் மீனவர்களிடம் பணம் வாங்க முடியவில்லை. மீன் தொழிலைச் சார்ந்திருந்த பனிக்கட்டித் தொழிற்சாலைகள் (ice factories) இயங்காமல் இருக்கின்றன. இவற்றில் வேலை செய்து வந்தவர்களின் ஜீவனம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் பல தொழிற்சாலைகள் ஒரு நாளைக்குப் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பனிக்கட்டிகளைச் செய்யும் திறன் பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

மீன் ஏற்றுமதி நின்று போனதால், குளிர் பதன வசதி செய்யப் பட்ட கப்பல்களுக்கான தேவை குறைந்து விட்டது. பல கோடி ரூபாய் முதலீட்டில் இத்தகைய கப்பல்களைக் கட்டி அல்லது வாங்கி இயக்கும் நிறுவனங்கள், நஷ்டத்திலிருந்து தப்பிக்க வேறு சந்தைகளைத் தேடும் நிலை ஏற்பட்டுள்ளது.

This page is powered by Blogger. Isn't yours?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Site Meter