Tuesday, January 11, 2005
ட்சுனாமி மீட்பு பணி ஒருங்கிணைப்பு குறித்து வேண்டுகோள்!
நண்பர்களே!
அனைவருக்கும் வணக்கம். ட்சுனாமி பேரழிவால் பாதிக்க பட்டவர்கள் மீட்பு பணி குறித்து விவாதிக்க இந்த பதிவை தொடங்கியுள்ளோம். இதை ஒரு கூட்டு முயற்சியாக கொண்டு செல்வதே எங்கள் எண்ணம். தமிழ் வலைப்பதிவுகளில் அவ்யப்போது மீட்பு பணிகள் குறித்து பல விஷயங்கள் எழுதபட்டுள்ளன. அவற்றை ஒரு முறையான வகையில் ஒழுங்கு செய்து, வாசகர்களின் பார்வைக்கு வைப்பதே இதன் நோக்கம். இதில் பங்கு கொள்ள அனைவரையும் அழைக்கிறோம்.
என்ன வகையான கருத்துக்களை வேண்டுமானாலும் இங்கே எழுதலாம். அறிவிப்புகளை இடலாம். வேண்டுகோள்களை முன் வைக்கலாம். அவையனைத்திற்கும் ஏதாவது ஒரு விதத்தில் ட்சுனாமி மீட்பு பணிகளுடன் தொடர்பு இருத்தல் இன்றியமையாதது, என்பதை தவிர வேறு கட்டுப்பாடு எதுவும் கிடையாது. எந்த வகையான அரசியல் பேசுவதையும் தவிர்க்கவேண்டும், என்று சொன்னாலும், மீட்பு பணிகள் மற்றும் பிரச்னைகளை புரிந்து கொள்ளும் வண்ணம் தொடர்புள்ள அரசியலை பேசலாம். குறிப்பாய் சில உதவிகள், உரிய மக்களுக்கு போய் சேராததன் அரசியலை பேசலாம். வேறு ஒரு உதாரணமாய், அருள்குமரன் ஏற்பாடு செய்த அரட்டையில், மீனவர்கள் மீண்டும் கடற்கரையோரமாகவே குடிசைகள் அமைப்பது, சமூக சூழல் மற்றும் அவர்களின் வாழ்க்கைமுறை காரணமாய் அது தவிர்க்க முடியாமல் போவது குறித்து பேசபட்டது. இது போன்ற பிரச்சனைகளுடன் தொடர்புள்ள சமூக அரசியலை பேசலாம். அப்படி செய்யும் போது பிரச்சனை எந்த விதத்திலும் திசை திரும்பி விடாத வண்ணம், அதன் அடிப்படை மீட்பு பணிகள் குறித்த கரிசனமாய் இருக்கும்படி பார்த்து கொள்ளவேண்டியது அவசியம்.
இது தொடர்பான பழைய பதிவுகளை, அதன் முக்கியத்துவம் சார்ந்து, அவ்யப்போது நான் (ரோ.வ.) இங்கே இடுவேன். ஆனால் பொதுவாய் மீட்புபணிகள் குறித்து பேச நான் தகுதியில்லாதவனாகவே இருக்கிறேன். பிரச்சனையோடு நேரடி தொடர்பில்லாதவனாய், எல்லாவற்றையும் செய்திகளாய் கேட்கும் நிலையிலேயே நான் இருக்கிறேன். ஆகையால் பிரச்சனையோடு எதாவது ஒரு வகையில் தொடர்புள்ள அனைவரும், தங்கள் பங்களிப்பை நல்குமாறு கேட்டுகொள்கிறேன்.
பங்களிக்க விரும்புபவர்கள், தங்கள் மின்னஞ்சல் முகவரியையும், பெயரையும் என் வலைப்பதிவிலோ, நரைனின் வலைப்பதிவிலோ அல்லது இங்கேயோ பின்னூட்டமாய் விட்டு செல்லவும். மின்னஞ்சலாய் rksvasanth@yahoo.com அல்லது narain@gmail.com என்ற முகவரிக்கும் எழுதலாம். வலைபதிவதற்கான அழைப்பு, அல்லது கடவுசொல் கொடுக்கப்படும். பொதுவாய் இங்கே வலைப்பதிவிலோ அல்லது மற்ற இணைய பத்திரிகைகள் மூலம் அறிமுகமானவராக இருப்பது நல்லது. வலைபதிய விரும்பாதவர்கள், எழுத விரும்பும் விஷயத்தை என் முகவரிக்கு எழுதினாலும், அதை என்னால் பதிவு செய்ய முடியும்.
வாருங்கள் நண்பர்களே! இதை ஒரு கூட்டுமுயற்சியாய் கொண்டு செல்வோம். உங்களால் சாத்தியமான எல்லாவகை பங்களிப்பையும் தாருங்கள். எல்லாவற்றிற்கும் ஏதாவது ஒரு பயன் இருக்கும். நன்றி!
அன்புள்ள ரோஸாவசந்த் மற்றும் நரைன்.